சனி, 28 ஆகஸ்ட், 2010

அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருமா? ஸ்டாலின், விஜயகாந்த் ஜோசியம்

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி இல்லை: விஜயகாந்த் தே.மு.தி.க. நகரச் செயலர் திருமணம் திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விஜயகாந்த் பேசியதாவது:

நான் தொண்டர்களை தெய்வமாக மதிக்கிறேன். குடும்பத்தில் ஆண் தவறு செய்தால் பெண் விட்டுக் கொடுக்க வேண்டும். பெண் தவறு செய்தால் ஆண் விட்டுக் கொடுக்க வேண்டும்.

எம்ஜிஆருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்தவகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்?

தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். ஆனால் நாலரை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார்.

திமுகவிடம் கூட்டணிக்காக என்றைக்காவது தூது விட்டுள்ளேனா? வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் கூட்டணி அமைப்பேன்.

டாக்டர் ராமதாஸின் கூட்டணி வேண்டாமென்றால் அவர் அறிமுகப்படுத்திய மஞ்சள் துண்டை பயன்படுத்துவது ஏன்? கலைஞரின் பொன் விழாவுக்குப் பின்புதான் அவரது மறுபக்கம் எனக்குத் தெரிந்தது.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கியுள்ளோம் என்றும், இப்போது விவசாயிகளுக்கு இலவச பம்புசெட் வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மின்சாரமே இல்லை, அதனால்தான் இதைக் கொடுக்கிறார். ஓட்டுக்காக இலவசத் திட்டங்களை அவர் அடுத்தடுத்து அறிவிக்கிறார்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். 10 எம்.எல்.ஏ, 10 எம்.பி.க்களுக்காக கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன்.

ஆட்சியை என்னிடம் கொடுங்கள். நான் நல்ல ஆட்சியைத் தருவேன். அடுத்த தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்காது என்றார்.


மீண்டும் தி.மு.க. ஆட்சி துணை முதல்வர் உறுதி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் மீண்டும் 6வது முறையாக முதல்வர் கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஈரோடு வஉசி பூங்காவில் நடந்தது.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலை மாத்திரமே மையமாக வைத்து செயல்படும் கட்சி திமுக அல்ல. மக்களுக்காக பாடுபடுவது திமுக.
திமுக அரசு ஐந்தாவது முறையாக ஆடசிக்கு வந்தபிறகு எத்தனையோ திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நாலாண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த 4 ஆண்டுகளில் 11 இடைத்தேர்தல்களையும் சந்தித்து இருக்கிறோம். அந்த 11 இடைத்தேர்தலிலும் திமுக அணி தான் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை உருவாக்கி உள்ளது. இதற்கு காரணம் முதல்வர் கருணாநிதி மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை தான்.

நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கலாம். தேர்தல் நேரத்தில் தான் உறுதிமொழி தருவார்கள். அதன்பிறகு திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீண்டும் 6 வது முறையாகவும் கருணாநிதி தலைமையில் தான் ஆட்சி அமையும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்து கந்தசாமி: சபாஷ்! சரியானப் போட்டி! ஹ ஹ ஹா (பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் பேசி, சிரித்து பார்க்கவும்)

மறக்காம வோட்டுப் போடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக